ஃபெடரல் ரிசர்வ் ஆளுநரை பணிநீக்கம் செய்யும் டிரம்பின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை
அமெரிக்க மத்திய வங்கியின் ஆளுநரைப் பணிநீக்கம் செய்யும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு, ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்தை உறுதி செய்வதாகக் கருதப்படுகிறது.
5-4 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பில், நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர் லிசா குக் தனது பணிநீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான “முறையான சட்ட நடைமுறைகளை” நிர்வாகம் வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.
இந்தத் தீர்ப்பு, இந்த விவகாரத்தை கீழ் நீதிமன்றங்களுக்குத் திருப்பி அனுப்புகிறது. அங்கு, குக் அடமான மோசடியில் ஈடுபட்டார் என்ற அதன் குற்றச்சாட்டுகளை டிரம்ப் அரசு நிரூபிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பணிநீக்க நடவடிக்கையைத் தொடர முடியும். மேலும், இந்தக் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட குக்கிற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
குக் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். வங்கியின் மீது டிரம்ப் அதிகக் கட்டுப்பாட்டைச் செலுத்த அனுமதிக்கும் ஒரு சாக்குப்போக்கு தான் இவை என்று ஃபெடரல் ரிசர்வ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சட்டப்படி, ஒரு அதிபர் ஃபெடரல் ரிசர்வ் ஆளுநர்களை “காரணத்துடன்” மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
இந்த நிபந்தனையானது, வங்கியை அரசியல் அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கவும், குறுகிய கால நலன்களுக்குப் பதிலாக நீண்ட காலப் பொருளாதார இலக்குகளை நோக்கமாகக் கொண்டு கொள்கைகளை வகுப்பதை உறுதி செய்யவும் கொண்டுவரப்பட்டது.
ஜனவரியில் நீதிமன்றத்தில் வாதிட்டபோது, குக்கின் வழக்கறிஞர் பால் கிளமென்ட், இந்த பணிநீக்கத்தை நிர்வாகம் கையாண்ட விதம், ஃபெட் அமைப்புக்கு காங்கிரஸ் வழங்க உத்தேசித்துள்ள பாதுகாப்பை ஒரு கேலிக்கூத்தாக ஆக்கிவிடும் என்று கூறினார்.
ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு முதன்மை குடியிருப்புகளைக் கோரி அவர் அடமானப் படிவங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி, குக்கை ஃபெட் அமைப்பிலிருந்து நீக்கும் தனது திட்டத்தை ட்ரம்ப் ஆகஸ்ட் மாதம் சமூக ஊடகங்களில் அறிவித்தார். வங்கிகள் பொதுவாக முதன்மை வீடுகளுக்குக் குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
வெள்ளை மாளிகையின் சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர், சமூக ஊடகப் பதிவு போதுமான அறிவிப்பையும் பதிலளிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியதாக ஜனவரியில் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
