API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்பு
முக்கிய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், செமாக்ளுடைட் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ‘செயலில் உள்ள மருந்து மூலப்பொருள்’ (API) தொடர்பான தரச் சிக்கல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, 2027 நிதியாண்டிற்கான 1.2 கோடி பேனாக்கள் (மருந்து செலுத்தும் கருவிகள்) என்ற உற்பத்தி இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளது.
“இந்தச் சிக்கல் எங்கள் உற்பத்தி கால அட்டவணையைப் பாதித்தாலும், ஏற்கனவே விற்கப்பட்ட பேனாக்களைத் தவிர்த்து, 2027 நிதியாண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் 60 முதல் 70 லட்சம் பேனாக்களை உற்பத்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தலைமை நிர்வாக அதிகாரி எரெஸ் இஸ்ரேலி முதலீட்டாளர்களுடனான உரையாடலில் தெரிவித்தார்.
வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்ட ஒழுங்குமுறை அறிக்கையில், தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட API தொடர்பான சிக்கல்களால், செமாக்ளுடைட்டின் சில தொகுப்புகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்குள் இல்லை என்பது கண்டறியப்பட்டதாக நிறுவனம் கூறியது.
இந்த குறிப்பிட்ட API தொகுதி, செமாக்ளுடைட் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விரிவாக்கச் செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆரம்பகட்ட ஆய்வின்படி, அந்த குறிப்பிட்ட API தொகுதியில் ஏற்பட்ட வேதிவினை சார்ந்த செயல்முறையினால் இந்த மாசு உருவானதாகவும், இது மருந்தின் கலவையைச் சிதைக்கக்கூடும் என்றும் இஸ்ரேலி கூறினார்.
மூலக் காரணத்தைக் கண்டறிந்து தயாரிப்புத் தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு தற்போதைய செயல்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று இஸ்ரேலி தெரிவித்தார்.
நோயாளி பாதுகாப்பு அல்லது தயாரிப்பு தொடர்பான ஏற்கனவே உள்ள உலகளாவிய ஒழுங்குமுறை விண்ணப்பங்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
இருப்பினும், சிக்கல் தீர்க்கப்பட்டு உற்பத்தி செயல்முறைகள் மீண்டும் சரிபார்க்கப்படும் வரை, இத்தயாரிப்பின் வணிக ரீதியான விநியோகம் தாமதமாகும்.
“ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உற்பத்தியைத் தொடங்கி பேனாக்களை விற்க முடியும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். செப்டம்பர் மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உண்மையான விநியோகம் இந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாதத் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கலாம்,” என்று இஸ்ரேலி கூறினார்.
