இவெகோ பங்குகளை வாங்க டாடா மோட்டர்ஸுக்கு இத்தாலி ஒப்புதல்
வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான இவெகோ குழுமத்தின் அனைத்துப் பொதுப் பங்குகளையும் வாங்குவதற்காக டாடா மோட்டர்ஸ் முன்வைத்துள்ள விருப்பத் தேர்வு அடிப்படையிலான டெண்டர் ஆஃபர் ஆவணத்திற்கு, இத்தாலியச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான கன்சப் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், செப்டம்பர் 7 அன்று இதற்கான ஏற்புக் காலம் தொடங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டாடா மோட்டர்ஸின் முழு உரிமையிலான மறைமுகத் துணை நிறுவனமான TML CV ஹோல்டிங்கஸ் மூலம் இந்தச் விற்பனை முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு இவெகோ பங்கிற்கு 14.10 யூரோ (டிவிடெண்ட் உட்பட ) என்ற விலையில் இந்தப் பங்குகள் கோரப்படுகின்றன என்று அந்நிறுவனம் வெள்ளிக்கிழமையன்று பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சலுகைக் காலம் நீட்டிக்கப்படாத பட்சத்தில், இவெகோ பங்குதாரர்கள் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 26 வரை தங்கள் பங்குகளை விற்பனைக்குச் சமர்ப்பிக்கலாம். இந்தக் காலக்கெடுவுக்குள் விற்பனையை ஏற்கும் பங்குதாரர்களுக்கு, விற்பனை காலம் முடிவடைந்த பிறகு வரும் நான்காவது வர்த்தக நாளான அக்டோபர் 30 அன்று அதற்கான பணம் வழங்கப்படும்.
சட்டரீதியான விதிமுறைகளுக்கு உட்பட்டு, நவம்பர் 2 முதல் நவம்பர் 6 வரை ஐந்து வர்த்தக நாட்களுக்கு ஏற்புக் காலம் மீண்டும் திறக்கப்படலாம். இந்தக் கூடுதல் காலக்கட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் பங்குகளுக்கான பணம் நவம்பர் 13 அன்று வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குதாரர்கள் இதில் பங்கேற்பதற்கான நடைமுறைகள் மற்றும் சலுகை ஆவணத்தை வெளியிடுவது, விநியோகிப்பது குறித்த விவரங்கள் தனி அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்படும் என்று டாடா மோட்டர்ஸ் கூறியுள்ளது.
இத்தாலியில் தொடங்கப்படவுள்ள இந்த விற்பனை அமெரிக்க பங்கு சந்தை தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்க அமெரிக்காவில் உள்ள பங்குதாரர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கூடுதல் ஒழுங்குமுறை ஒப்புதல்கள் தேவைப்படும் கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா அல்லது பிற அதிகார வரம்புகளில் இந்த விற்பனை அறிமுகப்படுத்தப்படாது.
ஜூலை 2025-இல் அறிவிக்கப்பட்ட இவெகோ நிறுவனத்தைக் கையகப்படுத்தும் டாடா மோட்டர்ஸின் திட்டத்தில், இந்த ஒப்புதல் ஒரு முக்கிய நடைமுறை நடவடிக்கையாக அமைந்துள்ளது. இந்த ‘டெண்டர் ஆஃபர்’ அதற்கெனக் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
