3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்
சரக்கு போக்குவரத்து, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பயணிகள் போக்குவரத்து ஆகிய துறைகளில் 3,400-க்கும் மேற்பட்ட மின்சார வணிக வாகனங்களுக்கான (eCV) ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக முன்னணி வணிக வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சுமார் 2,000 சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்கப் வாகனங்கள், 900 லாரிகள் மற்றும் 500 பேருந்துகள் அடங்கிய இந்த ஆர்டர்கள், பல்வேறு பயன்பாட்டுத் துறைகளை உள்ளடக்கியுள்ளன. இதில் இ-காமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ், நுகர்வோர் பொருட்கள் (FMCG மற்றும் FMCD) விநியோகம் மற்றும் நகரத்திற்குள் போக்குவரத்து ஆகியவை மட்டுமல்லாமல், சிமெண்ட், எஃகு, சுரங்கத் தொழில் மற்றும் விமான நிலையச் செயல்பாடுகள் போன்ற சவாலான துறைகளும், நகரங்களுக்கு இடையிலான மற்றும் நகரத்திற்குள்ளான பயணிகள் போக்குவரத்து சேவைகளும் அடங்கும்.
இத்தகைய பரவலான பயன்பாடு, நிஜச் சூழலில் மின்சார வாகனத் தீர்வுகள் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு, சோதனை முயற்சிகளிலிருந்து (pilot programmes) மாறி, பல்வேறு பயன்பாடுகளிலும் மின்சார வாகனங்களை முழு அளவிலான செயல்பாட்டு நடைமுறையில் இணைக்கும் ஒரு முக்கிய மாற்றத்தையும் இது குறிக்கிறது என்று டாடா மோட்டார்ஸ் கூறியது.
கடந்த 12 மாதங்களில், பல்வேறு பணிச் சூழல்கள் மற்றும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை மின்சார வணிக வாகனங்களை அறிமுகப்படுத்தி, அதன் மின்சார வணிக வாகனத் தயாரிப்பு வரிசையை நிறுவனம் கணிசமாக வலுப்படுத்தியுள்ளதாகவும் அது தெரிவித்தது.
