எரிபொருள், தங்க நுகர்வை குறைக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்கு ஆசியாவில் போரினால் ஏற்பட்ட குழப்பங்கள் உலகளாவிய எண்ணெய் சந்தைகளையும் விநியோகச் சங்கிலிகளையும் உலுக்கி வரும் நிலையில், கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பொதுவானதாகிவிட்ட வீட்டிலிருந்து வேலை செய்தல், காணொளிக் கூட்டங்கள், பயணங்களைக் குறைத்தல் மற்றும் நுகர்வைக் கட்டுப்படுத்துதல் போன்ற பல பழக்கவழக்கங்களை இந்தியர்கள் மீண்டும் செயல்படுட்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலைகளும் உலகளாவிய நிலையற்ற தன்மையும் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்கு அழுத்தம் கொடுக்கும் இந்த நேரத்தில், இந்த வேண்டுகோளை ஒரு பொருளாதார மற்றும் தேசியப் பொறுப்பாக முன்வைத்தார்.
இணையவழி மாநாடுகள், தொலைதூரப் பணி மற்றும் காணொளிக் கூட்டங்கள் உள்ளிட்ட, பெருந்தொற்றுக் காலத்தில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் ஏற்கெனவே பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுவிட்டன என்றும், இப்போது அவை தேசிய நலனுக்காக மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
தேவையற்ற பயணங்களைக் குறைப்பது பெட்ரோல் மற்றும் டீசலை சேமிக்க உதவுவதோடு, நாட்டின் இறக்குமதி செலவையும் குறைக்கும் என்று மோடி வாதிட்டார். மோடியின் உரையின் பெரும்பகுதி, தனிநபர் மற்றும் நிறுவன மட்டங்களில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது.
மெட்ரோ இணைப்பு வசதியுள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கவும், தேவையற்ற தனியார் வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்கவும் அவர் வலியுறுத்தினார். கார்கள் அவசியமான இடங்களில், கார் பூலிங் முறையை அவர் பரிந்துரைத்தார்.
இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான சார்பைக் குறைக்க, மின்சார வாகனங்களை பரவலாகப் பயன்படுத்தவும், சரக்குப் போக்குவரத்திற்காக ரயில்வேயை அதிகளவில் பயன்படுத்தவும் பிரதமர் ஊக்குவித்தார். குடிமக்கள் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்காவது வெளிநாட்டு விடுமுறைகள், வெளிநாட்டுத் திருமணங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.
தங்க இறக்குமதிகள் அந்நியச் செலாவணிக் கையிருப்புக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியர்கள் ஓர் ஆண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் குறைக்கவும், டீசலில் இயங்கும் நீர்ப்பாசன முறைகளுக்குப் பதிலாக சூரிய சக்தியில் இயங்கும் நீர்ப்பாசனப் பம்புகளைப் பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தினார்.
